கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

வெள்ளி, 11 ஜனவரி, 2019



செங்கம் நடுகற்கள் மரபு நடை

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்திருந்த ஐந்து இடங்களுகான இரண்டாம் செங்கம் நடுகற்கள் மரபு நடை 28-10-2018 அன்று திருவண்ணாமலை தமிழ்நாடு ஓட்டலிலிருந்து காலை மூன்று மூடுந்துகளில் 60 பேர் கால் 8.30 மணியளவில் புறப்பட்டது.

1. முதலில் செங்கம் சாலையில் திருவண்ணாமலையிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய கோளப்பாடி என்ற    
கிராமத்தில் இருந்த நான்கு நடுகற்களை பார்க்க சென்றோம். இது
முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி.601 இல் வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம்:
கோவியைய மயேந்திரபருமற்கு
யாண்டு பதினொன்றாவது கீழ்வேணாட்
டுத் துடரி மேல் விலக்குமிறை
யார் வந்த ஞான்று பெரும்பா
ண்ணரையர் மருமக்கள் அம்மகோ
ட்டையார் சேவகன் சாக்கை ப
றையனார் இளமகன் ஏறன்
எறிந்து பட்டான்





முதலாம் மகேந்திர பல்லவன் 11 ஆட்சியாண்டில் இரு குறு மன்னர்களிடையே நடந்த உள்ளூர் போரில் சாக்கை பறையனார் மகன் ஏறன் என்ற வீரர் ஒருவர் இறந்ததற்காக எடுக்கப்பட்ட கல். திரு.ர.பூங்குன்றன் ஐயா அவர்கள் சொன்ன நடுகல்லின் பொது விளக்கம் வருமாறு:
     குன்று சூழ்இருக்கை நாடு என்ற செங்கம் பகுதியை சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிறது, ஆநிரை என்ற கால்நடை வளர்ப்பு விலங்குகளை குறிப்பாக மாடுகளை கவர்ந்து செல்லுதலும், மீட்டலுமான கரந்தை, வெட்சி வீரர்களுக்கு நடுகல் எழுப்பும் வழக்கம் பற்றி குறிப்புகள் உள்ளன. இந்நடுகல்லில் ஆரம்பகாலங்களில் எழுத்து பொறிப்புகள் இல்லாமலும் பின் 6 நூற்றாண்டுக்கு பிறகு எழுத்தும் சேர்க்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து வந்த வணிகர்களின் மூலம் இவ்வெழுத்து பரவியதாக கருதப்படுகிறது. பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள், நடுகல்லும் அதிகம், இது பின்னர் சோழர் காலத்தில் குறைந்து வேளாண்மை அதிகமாகியது. பலி கொடுப்பது என்பது போரில் ஆட்கள் குறைவதால் ரத்தம் சிந்தினால் ஆள் எண்ணிக்கை பெருகும் என்ற நம்பிக்கையில் ஏற்பட்டது. இது காலப்போக்கில் அரசர்கள் தங்கள் நன்மைகளுக்கு செய்ய அதிகமாகியது. இவை உடல் நலத்திற்கு, போரில் வெற்றி பெற, வெற்றியடைந்த பின், மனித இன விருத்திக்கு, செல்வம் கொழிக்க என மாறியது (நவகண்டம், அரிகண்டம் போன்றவை) ரத்த உறவு கொண்ட பங்காளிகளே கல் எடுக்கும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது.
பெரிய கோளப்பாடியிலேயே காலை சிற்றுண்டி அருந்திவிட்டு 10.40 மணியளவில் அடுத்து

2. மேல் புஞ்சை கிராமத்தில் இருந்த கி.பி.7ஆம் நூற்றாண்டு நடுகல்லை பார்க்கச்சென்றோம். இக்கல்லில் மாந்தவர்மர் என்ற பட்டம் இங்குள்ள உள்ளூர் தலைவனுக்கு சூட்டிக்கொண்டனர் என்றும் சங்கமங்கலம் என்ற ஊரில் நடந்த போரில் சிரிகங்கரைசர், கொங்கரைசர் என்ற இரு சிற்றரசர்களுக்குயிடையே நடைபெற்ற போரில் இறந்ததற்கு எடுக்கப்பட்ட நடுகல் விளக்கம் கூறினார் திரு பூங்குன்றன் ஐயா அவர்கள். இந்நடுகல் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இதன் கல்வெட்டு வாசகம்:

(மா)ந்தபருமற்குப் பதி
னொன்றாவது கொங்க
ணி அரைசரு படை ஓடு சிரி
கங்கரைசரு சங்கமலத்
தெறிந்த ஞான்று சிரிகங்கரைசரு
சேவகர் ஓடு கனாய
ர் எறிந்து பட்ட கல்

இக்கல் இங்குள்ள வேடியப்பன் கோயிலில் உள்ளது, இங்கும், அருகில் உள்ள கடலாடியில் உள்ள நடுகல் வழிபாட்டிலும் உயிர்ப்பலி கொடுப்பதில்லை, சமணம் சைவம் பரவிய பின், மாறி இருக்க வாய்ப்பு உண்டு என கருதப்படுகிறது. இவ்வேடியப்பன் கோயிலில் எட்டி மரம்(ஸ்தல விருட்சம்) வைக்கப்பட்டுள்ளது.


3. இதற்கடுத்து நரசிங்கநல்லூர் அருகேயுள்ள படி அக்கிரகாரம் கிராமத்திற்கு 11.45 மணியளவில் ஒரு கிலோ மீட்டர் நடந்து சேயாற்றை கடந்து சென்றோம். இவ்விடத்தில் இரண்டு நடுகல் ஒன்றாய் அருகருகே வைக்கப்பட்டுள்ளது இதன் காலம் கி.பி.587 சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சியாண்டு 33ல் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:

1.கோவியைய சிங்கவிண்ணபருமற்கு முப்பத்து
2.மூன்றாவது கங்கதி அரைசரு மக்கள் மேன்விண்ணன்னா
3.ர் சேவகர் தொப்புரவருப்பாடி ஆ(ள்கி)ன்ற பசிரப்
4.பண்ணன் குறட்டாதன்…வரமு கொண்ட ஞான்
5.றெறிந்           9.னாதியார்
6.து பட்டா        10.மகன் க
7.ன் கந்த         11.ல்
8.பருபேன்
மற்றோரு நடுகல்லின் வாசகம்:
கோவியைய சிங்கவிண்ண
பரு….யாண்டு முப்பத்து.மூன்றாவது
சேவகர் மகனார் முக….சேவகர்
…பட்ட
சரையர்
ஆன் தொறு
எறிந்து
பட்டா
ருகல்

இதுவும் உள்ளூர் போரில் இறந்துபட்டமைக்காக எழுப்பபட்டக்கல்.






4. அடுத்ததாக தொரப்பாடி கிராமத்தில் இருந்த இரண்டு நடுகல்லை 12.30 மணிக்குச் சென்று பார்த்தோம். கி.பி.642 இல் முதலாம் நரசிம்ம பல்லவர் 12 ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டக்கல். இதன் வாசகம்:

கோவிசையஅ நரசிங்க பருமற்கு யாண்டு (பன்)
னிரண்டாவது கொங்கணி அரைசர் மகன் வ
ச்சன் மேற்சென்று சிரிகங்கைரசர் சே
வோர் எறிந்த ஞான்று பட்டார சிரிகங்கரைசர் சேவ
கர் கொற்றவிணற்ற குன்றனார் கல்

இக்கல்வெட்டு எழுத்து தொல்காப்பிய இலக்கண விதிப்படி வெட்டப்பட்டதாக திரு.பூங்குன்றன் ஐயா தெரிவித்தார். பல கல்வெட்டுகள் எழுத்துப்பிழைகள் இருக்கும் இக்கல்வெட்டு படித்த ஒருவர் சொல்லி வெட்டப்பட்டிருக்க கூடும் எனவும் கூறினார். அடுத்த கல்வெட்டு பொறிப்பு:
1.கோவிசைய மயேந்திர       6.எறிந்த ஞான்று கங்க
2.பருமற்கு(பத்து) ஆவதுக      7.ரைசரு சேவகரு எறிந்து
3.ங்கரைசரோடு புறத்து கங்    8.பட்டாரு ராராற்றூ ஆண்ட
4.கரைசரு மக்கள் பொன்      9,குன்றக்கண்ணியார்
5.னந்தியாரு பெருமுகை      10.கல்





இவ்வூரில் கல்வெட்டை சுத்தம் செய்து விழுப்புரம் தொல்லியல் அறிஞர் திரு.வீரராகவன் அவர்கள் படித்து காட்டினார். இரண்டாவது நடுகல் எழுத்துப் பொறிப்பை சுத்தம் செய்து படிக்க ஆரம்பித்தவுடன் அந்த ஊர் பெண் ஒருவருக்கும், முதியவர் ஒருவருக்கும் சாமி ஏறி ஆடி இத்தெய்வமான கல்லை தீங்கு செய்ய வந்திருப்பதாக கருதி சபிக்கும் சொற்களை உதிர்த்தனர் அதனால் மேற்கொண்டு சிக்கல் எழாமல் இருக்க உடன் கடைசி இடமான மேல் செங்கம் புறப்பட்டு சென்றோம்.

5. இறுதியாக மேல்செங்கம் அரசு வனத்துறையின் நீலகிரி தைல மர சமூக காட்டின் உள்ளே அமைந்த ஐயனார் கோயில் மரத்தடியில் பிற்பகல் 2.00 மணியளவில் உணவு (ஊண் சுவை அடிசில்) அருந்திவிட்டு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நடுகல்லை பார்தோம். இந்நடுகல் இராச சிம்ம பல்லவன் காலத்தில் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டது. இக்கல்லில் காமிண்டன் என்ற சொல் அக்காலத்தில் வலிமையானவன் என்ற அர்த்ததில் உள்ளது, பின்னர் தேவாரத்தில் இச்சொல் காமுண்டன் என்றால் ரவுடி என்ற அர்த்ததில் மாறியுள்ளது என்றும் மேலும் மல்செங்கை என்ற வார்த்தை மேல்செங்கை எனவும் அதைவிட மல் என்பது வலிமை என்ற பொருளில் வழங்கபட்டதாக கருத இடமுள்ளது எனவும் சொன்னார் திரு பூங்குன்றன் அவர்கள். மாமுடைய பாரதாயர் ஐகன் என்ற வார்த்தை பாரம் என்ற பெரிய குடும்பத்தில் பிறந்தவன் என்றும் இப்பகுதியில் இந்த குடிகளை சேர்ந்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனவும். ஐகன், ஐயன், ஐயனார் என மருவி வந்துள்ளதையும், மாடுகளை மீட்பதற்காக நடந்த சண்டையில் இறந்தவருக்கு எடுக்கப்பட்ட நடுகல் என திரு.பூங்குன்றன் விளக்கமளித்தார். இதன் கல்வெட்டு வாசகம் நடுகல் கல்வெட்டுகள் நூலில் கிடைக்கததால் இப்பதிவில் எழுத முடியவில்லை.





இதன் பின்னர் நடுகற்களை பற்றி மேலும் சில விளக்கங்கள் வந்திருந்த மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கேட்ட கேள்விகளுக்கு திரு ர.பூங்குன்றன் அவர்கள் விளக்கம் அளித்தார். அதன் சாராம்சம் வருமாறு:
Ø  உள்ளூர் செல்வத்தை பாதுகாக்க நடுகல் நடப்பட்டது, நந்திவர்மன் காலத்தில் தமிழ் எழுத்துகள் வருகின்றன, அரசுப்புலவர்கள் அதிகாரத்தை கல்வெட்டில் புகுத்த ஆரம்பிக்கின்றனர்.
Ø  வீர துக்க காணம் என்ற வரி அக்காலத்தில் நடுகல் வைக்க வாங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
Ø  பல்லவ அரசர்கள் பிராமணர்களை காடு ஒட்டிய பகுதிகளில் நாடாக பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் குடியமர்த்தி பிரமதேயங்கள் உருவாக்கினர்.
Ø  ஆஸ்திரிலேயாவில் இன்றும் பழங்குடி மக்கள் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள முறைகளின் படியே இறந்தவர்களுக்கு நடுகல் வைக்கின்றனர். Durkeim என்ற மேனாட்டு அறிஞர் இதை வளமை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நடுகல் வழிபாடு உள்ளது என தெரிவித்துள்ளார்.
Ø  தமிழ்ச்சமூகம் கி.பி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் எப்படி வளர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள எடுத்துகாட்டாக இருக்கிறது. 8 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சாதாரண மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை அறிய இந்த நடுகல் உதவுகிறது. ஆயுதம் பயன்படுத்தியது, வரிகள், வேளாண்மை போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளமுடியும். இப்போது இந்தப்பகுதியில் என்ன வகையான வழிபாடு நடக்கிறது என பார்த்தால் பழைய மரபு தொடர்ச்சி தெரியவரும்.
Ø  சந்தி வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஒரு கால கட்டத்தில் நடுகல் வழிபாடுடன் சேர்த்து இதையும் ஒன்றாகப்பார்க்கப்பட்டது. Hastings அறிஞர் வழியில் போய் வழிபாடு செய்தால் பாவங்கள் வழியிலேயே போய்விடும் என்ற நம்பிக்கை இருந்தது என்று கூறுகிறார், இன்றும் இப்பகுதியில் சந்தி வழிபாடு நடைபெறுகிறது. சங்க இலக்கியத்தில் அணங்கிடை நெடுமுடி என்ற சொல் வருகிறது. அணங்கு என்றால் தீண்டும் தெய்வம், வருத்துகிற தெய்வம். நடுகல் வழிபாடும் ஒருவகையான அணங்குதான்.
Ø  சமண முனிவர்கள் மலைக்குகைகளில் வந்து தங்குவதற்கு முன்பே நம் முன்னோர்கள் வழிபட்ட இடங்களான அரிட்டாபட்டி, திருமலை(ராமநாதபுரம்), பறையன்பட்டு ஆகிய இடங்களில் சமணப்படுக்கைகளுக்கு மேலே வீரர்களின் ஒவியம் உள்ளது. ஏற்கனவே வழிபட்ட இடங்களில் சென்று தங்கி பிரச்சாரம் செய்தால் நல்லது என்றே தங்கியுள்ளனர் சமணர். உயிர்விட்டப்பிறகு தான் சமணப்படுக்கைச் செய்யப்பட்டுள்ளது.
Ø  பள்ளி என்பது சமணத்தொடர்பான சொல் அல்ல, வடதமிழகத்தில் பள்ளி, நரிப்பள்ளி, புதுப்பள்ளி ஆகிய ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆடு மாடு தங்கும் இடம் பாயல் கொள்ளும் இடம் என நற்றிணையில் வருகிறது, இச்சொல் நினைவுச்சின்னம், உறங்குவதற்கும் என்ற சொல்லாகிவிட்டது. தாதகப்பட்டியில் பாகல் என்ற பலா மரத்தின் அடியில் வீரர்களை புதைத்து வழிபட்டு இருக்கிறார்கள். மரத்திற்கு அடியில் தாழியில் வைத்து புதைக்கப்பட்டச்செய்தி பதிற்றுப்பத்தில் வருகிறது. கல்வட்டம் வைத்த நடுகல்லும் இருக்கிறது. பெருங்கல் சின்னத்தைதான் பாழி, பள்ளி என்று அழைக்கின்றனர். உயிர் விட்ட இடத்தில் முன்னோர் தங்கியுள்ளனர் என்ற அர்த்ததில் பாழி பள்ளி என்ற சொல் உள்ளது. அதனால் தான் இங்குள்ள ஊர்களுக்கு பள்ளி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாடு மேய்ப்பவர்களின் பள்ளி என்ற சொல் நடுகல் வழிபாடு செய்த மக்களிடம் இருந்து சமணர்களிடம் சென்றுள்ளது. வடக்கிருத்தல் கூட நம்மிடமிருந்துதான் சமணரிடம் சென்றுள்ளது. அறிஞர்கள் சொன்னதால் கேள்வி கேட்காமல் அதையே சொல்லிக்கொண்டுள்ளனர். ஆய்வுகள், செய்திகள் சொல்வது வீரர்கள் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்ட இடம் பள்ளி இது நடுகல் தொகுதியில் இருந்து சமணர் எடுத்துக்கொண்டனர்.
Ø  பெண்களுக்கு நடுகல் அதிகம் இங்கு இல்லை காரணம் அவர்கள் இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டதுதான். கர்நாடாகாவில் அதிகம் உள்ளது. இது சதிக்கல், மாசதிக்கல் என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் செஞ்சி அருகே பென்னாகரத்தில் பெண் உருவம் உள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Ø  இக்கால மாணவர்களுக்கு நடுகல் தொடர்பான ஆய்வுகள் செய்ய வாய்ப்புள்ளவை - உருவத்தைப்பற்றி, சங்க காலம் முதல் வந்துள்ள மொழி அமைப்பு, அரசியல் (வர்மர், அரைசர், சேவகர்), நாட்டுப்பிரிவு, ஊர்ப்பெயர் ஆந்தைபாடி, பெருச்சானூர் (வன்னியரில் ஒரு பிரிவினர் பெருச்சாளியை தெய்வமாக வணங்கும் ஊர்), ஆட்ப்பெயர் (ஏரன்-ஏர்-எருது-குடி-குலச்சின்னத்தைக்கொண்ட குடியின் பெயர்).
Ø  வருங்கால சந்தததியினருக்கு வரலாறு, முன்னோர் பற்றிய தகவல்கள், தொல்லியல் குறித்த ஈடுபாடு குறித்து இஸ்ரேல் நாட்டினரின் வரலாற்று தொல்லியல் பற்றைப்போல் இருக்க வேண்டும் என்ற ஒரு உண்மை தகவலோடு விளக்கி கூறினார்.


இறுதியாக திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் இணைச்செயலர் திரு.பிரேம்குமார் அவர்கள் சென்ற மரபு நடை கோயில், சிற்பம், ஒவியம், கல்வெட்டு, குகை ஆகியவற்றைப் பார்த்தோம். இம்முறை செங்கம் பகுதியானது மலைகள், காடுகள், புதர் காடுகள் நிறைந்தவை, புதர் காடுகள், மழைய தருவிக்கும் தன்மை கொண்டவை, மேய்ச்சல் நிலமும் உள்ளவை, ஆகையால் மாடு வளரப்பு, மாட்டுச்சந்தை அந்தியூர், திருக்கடையூர், திருவண்ணாமலையில் போன்ற பகுதிகளில் ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தருமபுரி, கிருட்டிணகிரி, மலைத்தொடர்களின் கணவாய் பகுதியாக உள்ளதால் மாடுகளை வெகுதூரத்திலிருந்து பழங்காலத்தில் மாதக்கணக்காக கொண்டு வந்து விற்பனை செய்து, வாங்கி சென்றுள்ளனர். மந்தையாக இருந்ததால் கவர்தல், மீட்டல் நடைபெற்று இருக்கிறது இது தொடர்பான நடுகல்லும் அதிகம் உள்ளன ஆகையால் இதன் பழம் வரலாற்றை தெரிந்து கொள்ள இங்கு ஏற்பாடு செய்தோம், என்றும் பூங்குன்றன் ஐயா அவர்கள் சங்க இலக்கியம் அதிகம் பயன்படுத்துகிறார், இவை கற்பனையல்ல, வாழ்வியல் சாரந்த இலக்கியம். பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றைப்பற்றி நிறைய சொல்கின்றன என்று பேசி அனைவருக்கும் நன்றி கூறி அடுத்த மரபு நடை அடுத்த மாதம் நவம்பர் 25 அன்று பழங்கால பாறை ஒவியங்களை காண கீழ்வாலை, செத்தவரை மற்றும் பனமலை செல்லவிருப்பதாக அறிவித்து இனிதே நிறைவு செய்தார்.
* * * * * *



திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின்
திருமலை மரபு நடை

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்திருந்த திருமலை சமணர் கோயில் முதல் மரபு நடை 30-09-2018 ஞாயிறன்று நடைபெற்றது. நல்ல முறையில் அமைந்திருந்த இந்த பயணம் மற்ற மரபு நடையைவிட வரலாற்றை மாறுபட்ட பார்வையில் மற்றும் சிந்திக்க வைக்கும் நோக்கத்தில் நடைபெற்றது குறித்து மன நிறைவு அடைந்தேன்.

காலை 7 மணிக்கு திருவண்ணாமலை ஓட்டல் தமிழ்நாட்டில் கிட்டதட்ட 100 பேர் வரை கூடி ஒரு தனியார் கல்லூரி பேருந்திலும் ஓரு மூடுந்திலும் (Van) போளூர் வழியாக காலை 9.10 மணியளவில் திருமலைக்கு சென்றடைந்தோம். 










மலையின் அடிவாரத்தில் உள்ள குந்தவை ஜினாலயம் மண்டபத்தில் அனைவரும் காலை உணவு அருந்தியபின் 10 மணியளவில் மரபு நடை பதாகையுடன் ஊருக்குள்ளிருந்து மலைக்கு சென்றோம். மலையின் உச்சிக்குக்கீழே 16 1/2 அடி உயரமுள்ள சமண தீர்த்தங்கரர் சிகாமணிநாதர் என்றழைக்கப்படும் நேமிநாதரின் செங்குத்தான புடைப்பு சிற்பத்தை காண முடிந்தது. 


கர்நாடகாவில் உள்ள சிரவணபெலகொளாவில் உள்ள பாகுபலி என்ற கோமதேசுவரர் சிலையை நினைவுப்படுத்துகிறது. சமணத்தடங்களை பலருக்கும் அறிமுகபடுத்தும் அகிம்சை நடையை தொடர்ந்து நடத்தும் விழுப்புரம் திரு ஸ்ரீதரன் அப்பண்டைராஜ் அவர்களை சமணர்களின் பல் உயிர் ஒம்பும் வாழ்க்கை நெறிகளையும் இந்த இடத்தில் நான்கு விதமான தானங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன, என்ற விளக்கத்தை அளித்தார். அடுத்து திரு விஜயன், தலைமை ஆசிரியர் அவர்கள் சமணர்களின் இரண்டு பிரிவுகளை பற்றியும் திகம்பரர் மற்றும் சுதேம்பரர் என அழைக்கப்படுகிறார்கள் எனவும் திருமலை கோயிலை குந்தவை அவர்கள் ராசராசனின் நினைவாக எழுப்பப்பட்டது எனவும், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஒவியங்கள் பற்றியும் சுருக்கமாக எடுத்துக்கூறினார். இதற்கு மேல் மலையின் உச்சியில் சிறிய பார்சுவநாதர் ஆலயத்தை பார்த்தோம். அங்கேயே சற்று உயரத்தில் பாறைகளில் மூன்று பாத சிற்பங்கள் உள்ளதை கண்டோம். அங்கு அனைவரும் அமர்ந்து சற்று இளைப்பாறினோம். 




திரு செல்லங்குப்பம் சுப்புரமணியின் நாட்டுப்புறப்பாடல் ஒன்றை பாடி மகிழ்வூட்டினார். திரு பாலமுருகன் அவர்கள் இந்த மலை உச்சியின் மீதிருந்து இன்று தெளிந்த வானம் இருப்பதால் இதை பல்குன்ற நாடு என்றழைக்கப்பட்டது, எனவும் இந்த பகுதி இப்போது சுற்றித்தெரியும் கிழக்கு மலைத்தொடர்களை செஞ்சி, திருவண்ணாமலை, வேட்டவலம், தேவிகாபுரம், பர்வதமலை, செங்கம் என ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டினார். இது இயற்கையாக அமைந்த மலைத்தொடர் பகுதியாகையால் தொடர்ச்சியாக மக்கள் வாழும் இடங்களாக 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வருகிறது என்பதையும் கூறினார். பின்னர் மலையிலிருந்து கீழிறங்கி குந்தவை ஜினாலயம் சென்றைடைந்தோம். அனைவருக்கும் தேநீரும் சிமிலி என்ற கேழ்வரகில் செய்யப்பட்ட இனிப்பு உருண்டையும் வழங்கினர்.

      இந்த திருமலை மரபு நடைப்பற்றி முதலில் வேலூர் கணாதிபதி துளசிஸ் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு சேகர் அவர்கள் ஆற்றிய உரையின் கருத்துக்கள் :

Ø  இந்த மலையானது, 8 ஆம் நூற்றண்டுக்கு பிறகு எழுப்பபட்டாலும், இதற்கு முன்னரே இங்கு மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.
Ø  இதை Paleolithic Cite என்று சொல்லுவார்கள், சீவக சிந்தாமணி இந்த பகுதியில் தான் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு கூற்று உண்டு.
Ø  இங்கிருந்த எடுக்கப்பட்ட பல பழங்கால சிலைகள் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டன
Ø  இங்கு 23 கல்வெட்டுகள் உள்ளன அவை பராந்தக சோழன் காலம் முதல் நாயக்கர் காலம் வரை உள்ளன. ஏரிக்குத்தானம் அளித்தது, மதகு கட்டியது ஆகியவை அடங்கும். அக்கால அரசர்கள் அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததை இங்கு காணலாம்.
Ø  இந்த கோயிலில் உள்ள ஒவியங்களை Fresco Technique என்ற முறையில் மாட்டு கொழுப்பாலும், செங்காவி மற்றும் இயற்கையான நிறங்களாலும் வரையப்பட்டுள்ளது..
Ø  குறிப்பாக சிற்பங்களுக்கு மூன்று வகையான கற்கள் பயன்படுத்துவர் அவை கடினப்பாறை, மென்மையானப்பாறை, மண்பாறை இவற்றில் இப்பகுதி மென்மையான பாறைகளால் ஆனது.

அடுத்து பேசிய பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் அவர்கள் கூறிய கருத்துக்கள் :

Ø  இப்பகுதி பெருங்கற்காலத்தில் வாழ்ந்தவர்களின் பகுதியாகும்.
Ø  மலைபடுகடாமில் குறிப்பிடுவதுபோல் இந்த மலைப்பகுதி வாழ்விடமாக திகழ்ந்துள்ளது. மேலும் சுனைகள் அதிகம் உள்ளதால் சமணர்கள் வாழ்ந்துள்ளனர்
Ø  5, 6ஆம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்கள் செய்த காலம் வரையும், பிராமி கல்வெட்டுகளும் இங்கு கிடைக்காததால் முற்காலத்தைப்பற்றியும் அறிய முடியவில்லை.
Ø  பல்லவர் இறுதிக்காலமான பொது ஆண்டு(கி.பி) 881 இல் பல்லவ அரசி சின்னவையின் கல்வெட்டு கிடைக்கிறது.
Ø 8ஆம் நூற்றாண்டில் நடு நாட்டையும், தொண்டை மண்டலத்தையும் ஆட்சி செய்த கன்னரத்தேவனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
Ø  ராசராச சோழன், ராசேந்திர சோழன் ஆகியோரின் மெய்கீர்த்தி அடங்கிய கல்வெட்டும் உள்ளன.
Ø  ராசராசனின் நினைவாக அவர் தமக்கை குந்தவை எழுப்பிய இந்த சமண ஆலயம் பொது ஆண்டு(கி.பி) 1124 என தெரிகிறது.
Ø  வீர நாரயண சம்புவராயர் மற்றும் விசயநகர ஆட்சியாளர் வரை கல்வெட்டுகள் உள்ளன.
Ø  ஆசிவகத்தின் அடுத்த நிலையில் உள்ள சமண சமயம் சுயக்கட்டுபாடு அடங்கிய வாழ்வியலின் அடிப்படைகளை தாங்கி இவ்விடம் திகழ்கிறது.

இதற்கடுத்த பேசிய திரு அண்ணாதுரை அவர்களின் கருத்துகள்

Ø  இயற்கையான இந்த பகுதியை, மலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். வானியியல் அறிவுதான் முக்கிய காரணம்.
Ø  அக்கால மக்கள் பழங்குடியினர் வட்டாரத்தன்மை வாய்ந்த விளைப்பொருட்கள், விவசாய மரபு, வணிக மரபை பின்பற்றி வந்தனர்.
Ø  உழவுப்பணிக்கு அடிப்படையான அறிவை சூரியனிடமிருந்து பெற்றனர். பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவை சந்திரனிடமிருந்து கணித்தனர்.
Ø  இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நோக்கம் என்ன, அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும், இங்கு ஏன் வருகிறோம், இதை ஏன் இன்று பார்க்க வேண்டும் என சிந்திக்க வேண்டும்.
Ø  மேலும் சமணம் ஏன் வீழ்ச்சியடைந்தது, என்பதையும் சிந்திக்க வேண்டும்.

   இதன் பின் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொருளாளர் திரு மு.கா.மணியரசன் பேசியவை :

Ø  முற்காலத்திலிருந்தே பல்வேறு மதங்களும், மத தத்துவங்களும் இருந்துள்ளன. சிரவணபெலகொலாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இது இருந்துள்ளது, அதே போன்ற பூகோள அமைப்பும் இங்கு உள்ளது.
Ø  மலையிலிருந்து நிலம் சார்ந்த பல்சமய வாழ்க்கை சமணம் சார்ந்த பல்வேறு உயிரனங்களும், தாவரங்களும், மனிதர்களும் வாழ்ந்த பகுதியாக திகழ்கிறது.
Ø  இப்பகுதியில் நிலத்திற்கேற்றவாறு உள்ள உயிரனங்கள் உள்ளன குறிப்பாக குள்ளரக மாடுகள் இப்பகுதியில் உண்டு அவை விவசாயத்திற்கு சிறந்தவை.
Ø  பன்முகத்தன்மை வாய்ந்த இந்நாட்டில் தத்துவத்தை புரிந்து இயற்கையோடு இயந்த வாழ்க்கை வாழ்ந்தனர். சமணமும் அதைத்தான் சொல்கிறது. இந்த மண்ணுக்கு ஏற்ப வாழ்ந்தும் சென்றுள்ளனர்
Ø  சமண மதத்தில் ஐந்து கோட்பாடுகள் உள்ளன அவற்றில் ஐந்தாவது கோட்பாடான அகிம்சையை மகாவீரர் தருகிறார்.
Ø  மதத்தலைவர்கள் தங்கள் கோட்பாடுகளை விளக்கி, பேசி பரப்புகின்றனர் இதன் மூலமாக கலை, பண்பாடும் உருப்பெருகிறது. இது போன்ற தத்துவங்களை நம் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

திரு வையவன் அவர்கள் பேசிய கருத்துகள் பின் வருமாறு :

Ø  சமணம் வருவதற்கு என்ன இருந்தது, பௌத்தம், சமணம், சைவம், வைணவம், கிறிஸ்த்துவம், இசுலாம் போன்றவை எது சிறந்தது என்பது வேறு இதில் வரலாற்று ரீதியாக எது சிறந்தது என்று பார்க்க வேண்டும்
Ø  பழைய வரலாற்றை மாற்றி அமைக்கும் பல தடயங்கள் கிடைத்து மாறி வருகின்றன. தொல் பழங்குடியினர் வாழ்ந்த மரபில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
Ø  இப்பகுதி கண்டங்கள் நகர்ந்து ஏற்பட்ட காலம் முதல் கடலுள் மூழ்காத தக்காண பகுதியாக இருப்பதாக அறியப்படுகிறது, ஜவ்வாது மலையில் வைனுபாபு வான்வெளி ஆய்வு மையம் உள்ளது, இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக விளங்குகிறது.
Ø  மதுரையில் கூன் பாண்டியனை மதம் மாறிய பின் நின்ற சீர் நெடுமாறன் என்ற மாற்றியது, மதம் அரசை கைப்பற்றி மனிதரை மாற்றியது.
Ø  நம் உடல் இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது, மதங்கள் உள்ளே புகுந்து நெருட வைக்கிறது, மாலை போட, நாமம் போட, குல்லா போட வைக்கிறது.
Ø  நாம் தமிழ் இனத்தை, மொழியை, வரலாற்றை நாம் தேடுகிறோம், இப்படிப்பட்ட மதம் சார்ந்தவை ஒரிடத்தில் நின்று விடும் ஆனால் நம் செம்மாந்த வரலாற்றைத்தான் தேடிச் செல்ல வேண்டும்.
Ø  பழங்கால, ஆதிகால உணவு அசைவம் தான் இருந்தது, சமணத்தின் உயிர்க்கொலை என்ற உயரிய கோட்பாடுகளினால் இதிலிந்து விலகினர்.
Ø  அறிவின் அடிப்படை, உயிர்க்கொலை, பஞ்சமா பாதகங்கள் என பின்னர் ஊட்டப்பட்டது, நம் மரபில் இறைச்சிதான் உள்ளது அதன் எச்சமும் உள்ளது. அதனால் தான் இன்னமும் அதை விடுவதில்லை.
Ø  வரலாற்றிற்காக கல்வெட்டுகள், சின்னங்கள், அகழாய்வு என பார்த்து படித்து தெரிந்து கொண்டாலும் நம் இரத்தத்தில், நம் அணுக்களில் இலட்சம் ஆண்டுகளாக ஒடிக்கொண்டிருக்கும் வரலாறு என்பது வேறு அந்த வரலாற்றையும் நாம் தேட வேண்டும்.

இறுதியாக பேராசிரியர் சு.பிரேம்குமார் பேசியதாவது :

Ø  சமணர்களில் மதுரைக்கு சுவேதம்பரரும் இப்பகுதிக்கு திகம்பரரும் வந்தனர். சுவேதம்பரர் பஞ்ச பூத கோட்பாட்டை ஒப்புக்கொள்பவர்கள். பஞ்ச பூத கோட்பாடு தமிழர் கோட்பாடு.
Ø  ஆகாயத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் சமணர்கள், ஒழுக்கத்தைப்பற்றி சொல்லப்படுகிறது, உயிர்க்கொலை பற்றியும் தாவரங்கள் பற்றியும், உயிரனங்களின் மேன்மையும் சமணத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் தொல்காப்பியத்தில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை சொல்லப்பட்டிருகிறது. நம் இலக்கியத்திலும் இதைப்பற்றி நிறைய சொல்லப்பட்டிருகிறது. நாம் மறந்து போன விஷயங்களை வேறு சிலர் வந்து ஞாபகபடுத்துகின்றனர்
Ø  ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளில், கோட்பாடுகளின் மீது தான் புதியவை வரும். இதற்கு நம் தமிழின் மூலம் தொல்காப்பியம்தான். இதற்கு பின் இலக்கிய மரபு நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இங்கு இருந்த தொடர் வாழ்வியல் தான். இந்த சிறப்பு வேறு உலக இலக்கியங்களுக்கு இல்லை.
Ø  ரோமானியர்கள் இங்கு வணிகத்திற்கு வந்திருக்கிறார்கள்,
Ø  மதங்களுக்கு பின்னால் வணிகம் இருக்கிறது
Ø  ஆங்கிலேயர் ரயில் பாதை போட்டது வணிகப்பொருள்களை கொண்டு செல்லத்தான்.
Ø  இதைப்போன்றுதான் வரலாற்றில் வணிக வழிப்பாதைகள் இருந்துள்ளன. இவை, தங்குவதற்கும், எடுத்துச்செல்வதற்கும், விற்பதற்கும் பயன்பட்டன.
Ø  உயிர்க்கொலைப்பற்றி பேசுபவர்கள் 64 கலைகளை எப்படி ஏற்படுத்தினர், உயரை கொன்றால்தான் மருத்துவராக முடியும் பின் எப்படி, கல்வி, மருத்துவம் கற்றுக்கொடுத்தனர்.
Ø  விவசாயம் என்பது பல்லுயிர் பெருக்கமும் அழிவும் நிகழும். இப்பகுதி பல்லுயிர் பெருக்க நிறைந்தவை. குறிப்பாக வணிகர்கள் இங்கு விளைந்த பருத்திக்காகவே வந்தனர். இந்த அடிப்படையில் தான் சிற்பம், கோயில், ஓவியம் போன்றவை வந்தன.
Ø  வணிக வழியில் படையெடுக்களும், போர்களும் நிகழ்ந்துள்ளன இவை நாட்டின் வளங்களை கைப்பற்ற நடந்தவை
Ø  வரலாற்றை ஒரு சார்பாக சொல்லக்கூடாது, பிறரின் கோட்பாடுகள், கருத்துகளையும் மனதில் கொள்ளவேண்டும்.
Ø  சைவத்தின் தேவாரம் கடவுளை, சிவனை மட்டும் பாடவில்லை, தளத்தின் இருப்பிடம், வழிபட்டவர்கள், சூழல் என பல்வேறு தகவல்கள் உள்டக்கியுள்ளது. மதங்கள் ஏன் வழிபாட்டை மட்டும் கூறிச்செல்கின்றன என்பதை சிந்திக்க வேண்டும்.
Ø  தமிழ்ப்பாடல்களில் கருப்பொருள் என்பது 14 வகைகளை கொண்டது, இசை, உணவு, நீர், மரம், செடி, கொடி, பண் அமைப்பு போன்றவை. இது வரலாறாக பண்பாடாக மாறாதா என்ற பார்வை நமக்கு வேண்டும். நம் வரலாற்றுப்பயணம் உண்மையைத் தேடுவதற்கான பயணிக்கும் கூட்டமாக இருக்க வேண்டும்.

மரபு நடைக்கு வந்தவர்களுக்கு திருமலை சமணர் கோயில் என்ற 6 பக்க விளக்க அறிக்கை கோயிலை பற்றியும், சமண சிற்பங்களை குறித்து ஒன்றும், திருமலைப்பற்றி திரு ர.விஜயன் எழுதிய சமணர் வரலாற்று நூலின் 36 பக்க நகல் ஒன்றும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பற்றி வரைபடம் மற்றும் சிறு நூல் (திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்டது) ஆகியவை கொடுத்தனர். இந்த உரைகளின் கருத்துகளையும் கொடுத்த நூல், அறிக்கை மற்றும் வரைபடங்களை பெற்றுக்கொண்டு அனைவரும் பிற்பகல் உணவிற்காக திருமலையில் உள்ள சமண மடமான ஆச்சார்ய அகளங்க கல்வி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள உணவுக்கூடத்தில் உணவருந்திவிட்டு, அங்குள்ள அரங்கத்தில் குழுப்படம் எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு திரும்பினோம்.  





Research Article -3 - Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796)

  Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796) (Monograph in Tamil by Jayaseela Stephen, Pondicherry, 1...