கம்போடியா ஆங்கோர்வாட் மரபு நடைப் பயணம்
20-10-203 முதல் 25-10-2023 வரை
எண்திசை வரலாற்று மரபு நடை குழு ஏற்பாடு செய்த கம்போடியா ஆங்கோர்வாட் பயணத்திற்கு மே, 2023 முதல் பதிவு செய்ய ஆரம்பித்து 42 பேர் பதிவு செய்தனர், இறுதியாக 40 பேர் பயணத்திற்கு தயாரானோம். கடந்த 2018 டிசம்பர் மாதம் அஜந்தா மற்றும் எல்லோரா மரபு நடை செல்லும் போது கம்போடியா செல்ல திட்டம் உள்ளது என சோழர் வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கூறினர். உடன் 2019 ஆண்டே கடவுச் சீட்டு (Passport) எடுத்து எப்போது சென்றாலும் செல்ல வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக தொய்வு ஏற்பட்டது. இதன் பின்னர் எண்திசை வரலாற்று மரபு நடை குழுவினர் இந்த வெளிநாட்டு மரபுநடையை நடத்த ஏற்பாடு செய்தனர். ஐந்து மாத்திற்கு முன்னரே திட்டம் போட்டு ஆரம்பித்தனர், நான் மூன்று மாதம் கழித்து ஜூலை மாதம் தான் பதிவு செய்தேன். இடைப்பட்ட காலத்தில் பல விளக்கங்கள் மூலம் பயணத்திட்டத்தையும், சந்தேகங்களையும் தெளிவு படுத்தினர். எண் திசை வரலாற்று மரபு நடைக் குழவினர் Grand Royal Tours அமைப்பினர் மூலம் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். திட்டமிட்டபடி 20-10-2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பி 25-10-2023 அன்று வந்து சேர்ந்தோம். அம்மரபுநடையில் ரசித்தவை, பார்த்தவை குறித்தே இப்பதிவு.
முதலில் கம்போடியா பற்றியும் ஆங்கோர்வாட் குறித்தும் ஒரு சிறிய வரலாற்று விளக்கம்:
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் நாடுகளை எல்லையாகக் கொண்டு அமைந்த நாடுதான் கம்போடியா. பிரான்ஸிடமிருந்து 1953ல் சுதந்திரம் பெற்ற இந்த நாட்டின் மக்கள்தொகை 1 கோடியே 65 லட்சம், இதன் பரப்பளவு 1,81,035 சதுர கி.மீட்டர்கள். பண்டைய காலத்தில் கம்போஜம் என்றழைக்கப்பட்ட கம்போடியாவை எட்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இந்திய வம்சாவளி மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாம் யசோவர்மன் என்ற மன்னன் யசோதராபுரம் என்ற நகரை உருவாக்கியப் பின்னர், அங்கோர் என அறிவித்து தலைநகராக மாற்றினார். அதுவே, அங்கோர்வாட் என்றழைக்கப்படுகிறது. யசோவர்மனுக்கு பின் ஆட்சி செய்த கெமர் பேரரசு மன்னர்கள் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் பர்மாநாடுகளின் சில பகுதிகளை இணைத்தும் சிதறிக் கிடந்த கம்போடியா பகுதிகளை ஒருங்கிணைத்தும் 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். கம்போடிய வரலாற்றில் பொற்காலமாக வர்ணிக்கப்படும் கெமர் பேரரசு ஆட்சியின் மன்னர்கள் சைவ, வைணவத்தை பின்பற்றி வாழ்ந்தனர். சில மன்னர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினர். இவர்கள் அங்கோர் நகரிலும், அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் பல இந்து, பௌத்த கோயில்களை உருவாக்கினர். அவை இன்றும் தலைசிறந்த பாரம்பர்ய பண்பாட்டுச் சின்னங்களாக உள்ளன. கம்போடிய அரசர்களின் காலவரிசை 14-ஆம் நூற்றாண்டில் முற்றுப் பெறுகின்றது. நிர்வாகம், வேளாண்மை, கட்டிடக்கலை, நீரியல், நகரத் திட்டமிடல், கலைகள் போன்ற துறைகளில் ஏற்பட்ட சாதனைகள், இந்த நாகரிகத்தின் ஆக்கத்திறன், முன்னேற்றம் ஆகியவற்றுக்குச் சான்றாக உள்ளன. தென்கிழக்காசியப் பண்பாட்டு மரபில் இது ஒரு அடிப்படை மாற்றம் ஆகும்.
கிட்டதட்ட 400 ஆண்டுகளுக்கு மேல் கேட்பாரற்று கிடந்த ஆங்கோர்வாட் கோயில்களும், பாரம்பரிய சின்னங்களும் இயற்கையின் சீற்றத்திற்கு உட்பட்டு யாரும் வசிக்காத பகுதிகளில் காடு போல் அடர்ந்த காடுகளாக மாறி ஆங்கோர்வாட கோயில்களை மறைத்துவிட்டன.
1863 ஆண்டிலிருந்து கம்போடியா பிரான்ஸ் நாட்டின் காப்பரசாக இருந்தது, இரண்டாம் உலகப் போரில் சிறிது காலம் ஜப்பானின் கீழ் இருந்தது. 1953 ஆண்டுதான் கம்போடியா விடுதலை அடைந்தது. இதன் பின் 1975-1978 ஆண்டுகளில் கெமர் ரூஜ் கொடுங்கோலாட்சியில் லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், நாட்டில் பஞ்சமும், வறிய ஏழ்மையும் ஆட்கொண்டது. பல கோயில்களும் நாட்டின் கட்டமைப்பும் பாழடைந்தன. அமைதி உடன்படிக்கையின் படி அமைதி திரும்பி 1993க்கு பிறகு நவீன நாடாக மாற்றம் அடைய தொடங்கியது. இன்றளவும் உலகில் ஏழ்மை நாடாகவே கருதப்படுகிறது. நாட்டிற்கு வேளாண்மை, துணி உற்பத்தி மற்றும் சுற்றுலாவே மிகவும் வளர்ச்சிக்கு உதவும் துறைகளாக விளங்குகிறது.
முதல் நாள் : 20-10-2023
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எண்திசை வரலாற்று மரபு நடையினர் மாலை 7.30 மணிக்கு வந்துவிட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல நல்லது எனக் கூறியபடி நான் 7.00 மணிக்கெல்லாம் சென்னை சென்று சேர்ந்தேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் Grand Royal Tours அமைப்பை சேர்ந்தவர்கள், வானூர்தி அனுமதி சீட்டு (boarding pass), மின்னணு அயல்நாட்டு நுழைவுச் சீட்டு (e-visa), கம்போடியாவில் தங்கும் விடுதியின் விவரம் மற்றும் அனைவருக்குமான அறை ஒதுக்கீடு ஆகியவற்றுடன் சிறிய பை ஒன்றை வழங்கினர். வானூர்தி சென்னையிலிருந்து பேங்காக் வானூர்தி நிலையத்தில் நான்கு மணி நேர காத்திருப்புக்குப் பின் கம்போடியா சீம் ரீப் செல்ல வேண்டியிருந்ததால் எண்திசை வரலாற்று மரபு நடையின் திரு.செந்தில் குமார், திருமதி நித்யா செந்தில் குமார், திருமதி ராதா ஆகியோர் அனைவருக்கும் மூடப்பட்ட ஞெகிழி தட்டில் காலை உணவை கொடுத்தனர். பின்னர் அனைவரும் வானூர்தி நிலையத்தின் உள்ளே சென்று எடுத்துச் செல்லும் பெட்டி மற்றும் பையை எடை போட்டு Air Asia வழங்கிய வானூர்தி அனுமதி சீட்டைப் (boarding pass) பெற்றுக் கொண்டு உடல் மற்றும் எடுத்து செல்லும் பயணப் பெட்டிகள், மற்றும் பைகளை முழு பரிசோதனை செய்யும் இடத்திற்கு சென்றோம். இப்பரிசோதனை முடிந்த பின் இறுதியாக குடியேற்ற பரிசோதனை (Immigration check) செய்த பின் கடவு சீட்டில் (Passport) முத்திரை பதித்தனர். இவையெல்லாம் முடிக்க கிட்டதட்ட மூன்று மணி நேரமானது. வானூர்தி செல்லும் வாயில் எண்.3 இல் சென்று அமர்ந்து காத்திருந்து பின்னர் 10.45 மணிக்கு வானூர்தியில் சென்னையில் ஏறி 11.50 மணிக்கு தாய்லாந்து நாட்டின் பேங்காக் டான் மியாங்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Don Mueang International Airport) விடியற்காலை 4.30 மணிக்கு இறங்கினோம். இந்தியாவிற்கும், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டிற்குமான நேர மாறுபாடு 1.30 மணி நேரமாகும். எங்களுடன் எண்திசை வரலாற்று மரபு நடையின் திரு.செந்தில் குமார், திருமதி நித்யா செந்தில் குமார், திருமதி ராதா மற்றும் Grand Royal Tours அமைப்பை சேர்ந்த திரு பிரகாஷ் அவர்களும் பயணித்து வந்தனர்.
இரண்டாம் நாள் : 21-10-2023
பேங்காக் டான் மியாங்க் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நான்கு மணி காத்திருப்பில் அனைவரும் சற்று ஓய்வெடுத்து சென்னையில் கொடுத்த ஞெகிழி தட்டைப் பிரித்து காலை உணவருந்தினோம். இதன் பின் வானூர்தியில் காலை 10.20 மணிக்கு கிளம்பி 11.30 மணிக்கு சீம் ரீப்பில் (Siem Reap) இறங்கினோம். அங்கு கம்போடிய நாட்டு குடியேற்ற பரிசோதனையை முடித்து, கடவு சீட்டில் முத்திரை குத்திய பின் வெளியே வந்தோம். ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த கம்போடிய நாட்டு வழிகாட்டி திரு மிக் ரத்னம் எங்களை வரவேற்றார், பின்னர் 40 பேரும் குளிர் சாதன பேருந்தில் எங்களை வழிநடத்தி சென்று ஐந்து நாட்களும் உங்களுடன் இடங்களை காட்டி விளக்கம் தரப்போவதாக எடுத்துக் கூறி தன்னை அறிமுக படுத்திக் கொண்டார். நண்பகல் 12 மணியாகி வட்டதால் தங்கும் விடுதி சென்று இளைப்பாறி ஒய்வெடுத்தால் நேரமாகி பாதிநாள் வீணாகிவிடும் என்பதால் சீம்ரீப்பில் இருந்து நேராக பிற்பகல் உணவு அருந்திவிட்டு கம்போடிய தேசிய அருங்காட்சியகத்திற்கு செல்லலாம் என திட்டம் மாற்றப்பட்டு ஆங்கோர் நகர ‘வணக்கம்’ உணவகம் சென்றோம். வணக்கம் உணவகத்தில் நம் நாட்டு உணவான சோறு, சாம்பார், குழம்பு, பொரியல் அப்பளம் ஆகியவற்றை சுவைத்தோம். இந்த உணவகம் ஒரு கேரள மலையாளியால் நடத்தப்படுகிறது. இதன் பின் 3.00 மணிக்கு ஆங்கோர் தேசிய அருங்காட்டிசியகம் சென்றோம். அருங்காட்சியக நுழைவுச் சீட்டு 12 $ (டாலர்) எண்திசை மரபு நடை குழவினர் செலுத்தினர். மொத்தம் ஏழு அரங்கங்கள் கொண்டது. அவை :
ஆயிரம் புத்தர்கள் (Thousand Buddhas)
மதமும் நம்பிக்கையும் (Religion & Beliefs)
புகழ் பெற்ற கெமர் அரசர்கள் (Great Khmer Kings)
ஆங்கோர் வாட் (Angkor Wat)
ஆங்கோர் தாம் ( Angkor Thom)
கற்களின் கதை (Stories of Stones)
முற்கால ஆடை அணிகலன்கள் (Ancient Costumes)
2. இந்த அரங்குகளில் மிகவும் அழகான முறையில் தெளிவான விளக்கங்களுடன் சிலைகளும், வடிவங்களும், வரலாறும், கல்வெட்டுகளும், படங்களும், விளக்க காணொளிகளும், ஆங்கோர் வாட் கோயில் மாதிரியும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாலை 5.30 அருங்காட்டிசியகம் முடியும் நேரம் வரை பார்த்து விட்டு, முன்னரே பதிவு செய்யப்பட்ட ஆங்கோர் அரசாட்சி விடுதிக்கு (Angkor Kingdom Hotel) சென்றோம். விடுதியின் முகப்பிலேயே வரவேற்பு சாறு கொடுத்து வரவேற்றனர். ஏற்கனவே முடிவு செய்து ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அவரவர் சென்று களைப்பாறினோம், குளித்து புத்துணர்வு பெற்று பின்னர் 8 மணிக்கு சம்சாரா இந்திய உணவு விடுதியில் தமிழக உணவருந்தி தங்கும் விடுதி இரவு 9.30 மணி வந்து சேர்ந்தோம். இந்த சம்சாரா உணவு விடுதியும் ஒரு கேரள மலையாளியால் நடத்தப்படுகிறது.
இரண்டு சிறிய பேருந்தில் முதலில் காலை 10 மணிக்கு பிராசாத் கிராவான் (Prasat Kravan) கோயிலுக்கு சென்றோம். இது ஏலக்காய் வழிபாட்டிடம் என அழைக்கப்படுகிறது எனவும், பிராசாத் கிராவன் என்ற பெயர் கெமர் மொழியில் மனோரஞ்சிதப் பூ என கூறலாம் எனவும் வழிகாட்டி மிக் ரத்னம் எடுத்துரைத்தார். வரிசையாக ஐந்து கோயில்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. முதலாம் அர்சவர்மன் (கி.பி.915-925) காலத்தில் கட்டபட்டது எனவும் அக்கோயிலின் கருவறை முகப்பு சுவற்றில் செங்கலால் புடைப்பு சிற்பமாக லட்சுமி, விஷ்ணு, திருவிக்ரமன், கருடன் மீது ஏறிச் செல்லும் விஷ்ணு என உள் சுவரின் மூன்று பக்கங்களிலும் காணப்படுகிறது.
அடுத்து ஸ்ரா ஸ்ரங் (Srah Srong) என்ற அரசர் நீச்சல் குளம் பார்க்க சென்றோம். பத்தாம் நூற்றாண்டின் இடையில் கட்டப்பட்ட இந்த குளம் ஏழாம் ஜெயவர்மன் சீரமைத்தான். 700 மீட்டர் நீளம், 300 மீட்டர் அகலம் கொண்ட பெரிய குளமாகும். படித்துறையின் முகப்பு கெமர் ஆட்சியின் ஐந்து தலை நாகம் நீண்ட உடல்போன்ற கைப்பிடி சுவரால் கட்டப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நடுவில் உள்ள சிறு கூம்பு வடிவ தூணில் தொல்லியில் துறையினர் தோண்டி ஆய்வு செய்ததில் 108 ரத்தின கற்கள் பெரிய வடிவில் எடுக்கப்பட்டதாக ரத்னம் தெரிவித்தார்.
இதன்பின் நீக்பின் குளம் (Neak poan pond) பார்வையிட்டோம். இது ஒரு ஏரியின் நடுவில் தனித்துவமான முறையில் கோயில் குளங்கள் அமைப்பில் உள்ளது. இதை ஜெய தடாகா என்று அழைக்கப்படுகிறது. ஏழாம் ஜெயவர்மன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. நாற்கர அமைப்பு கொண்ட குளங்களுக்கு நடுவே ஒரு குளத்துடன் அமைந்துள்ளது. நடுவில் நீக்பீன் ஆலயமும் அதை சுற்றி நான்கு சதுர குளங்களாக கிழக்கில் மனித தலையுடன் கங்கை ஆற்றையும் , தெற்கில் சிங்க தலையுடன் சிந்து ஆற்றையும், மேற்கில் குதிரை தலையுடன் அமி தர்யா ஆற்றையும், வடக்கில் யானைத் தலையுடன் மஞ்சள் ஆற்றையும் குறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரத்னம். இந்த ஐந்து குளங்களில் புத்த வழிபாடு செய்பவர்கள் தங்களின் தோஷத்தை போக்க அந்தந்த குளத்தில் நீராடி வழிபட்டு சென்றால் நன்மை கிடைக்கும் என ஐதீகம் என விவரித்தார்.
ஏரி நடுவே குளங்களை பார்த்த பின் வெளியே வந்து சாலையின் மறுபுறம் இருந்த கடையில் இளநீர் வாங்கி அருந்தினேன். மிகவும் பெரியதாக இருந்தது, முழுவதும் குடிக்க முடியாததால் மீதி நீரை தனியாக ஞெகிழி குவளையில் வாங்கி சென்று பின்னர் குடித்தேன். ஒரு இளநீர் ஒரு டாலர். அந்த இடத்தில் சற்று தள்ளி தனியாக ஒரு கீற்று கொட்டகையின் கீழே சிறு மேடையில் சில ஆண்டுகளுக்கு முன் கம்போடியாவில் டோல் போட் என்ற கொடுங்கோல் ஆட்சியில் நிகழ்ந்த உள்நாட்டு போரில் நில கண்ணி வெடியில் கை, கால், கண் மற்றும் உடல் ஊனமுற்ற ஐந்து மாற்று திறானளிகள் சுற்றுலாப் பயணிகளிடம் யாசகம் கேட்பதற்காக இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தனர்.
அடுத்து பிரியா கான் (Preah Khan) கோயிலை பார்வையிட்டோம். இக்கோயில் ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் கி.பி.1184 முதல் 1191 வரை கட்டப்பட்டது, பிரியா கான் என்றால் அரசர் வாள் என்று பொருள். நுழைவாயிலின் முன் இரு பக்கங்களிலும் ஐந்து தலை நாகராஜ சிலையின் உடலை அசுரர்கள் இழுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தன் தந்தை தரணி இந்திர வர்மன் நினைவாக, போரில் வென்றதற்காக கட்டப்பட்டது. 138 ஏக்கர் பரப்பளவில் சதுர வடிவில் கோயிலின் உள்ளே சிற்பங்கள் உள்ளன, கோயில் சிதைந்து காணப்படுகிறது. கோயிலின் மையப் பகுதியில் புத்தரின் ஸ்தூபி வைக்கப்பட்டுள்ளது, இந்த மைய பகுதியின் கருவறையின் சுவற்றை சுற்றிலும் வரிசையாக மேலிருந்து கீழாக சிறு துளைகள் உள்ளவற்றை காட்டி இந்த கோயில் கட்டப்பட்ட காலத்தில் வெளியே தெரியுமாறு விலையுர்ந்த கற்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், விளக்கு ஏற்றினால் அதிலிருந்து ஒளி எதிரொளிக்கும் என்றும் மிக் ரத்னம் கூறினார். அரசர் காலத்திற்கு பிறகு அந்த துளைகளில் இருந்த கற்கள் களவாடப்பட்டன என்றும் கூறினார்.
நண்பகல் கடந்து பிற்பகலில் மற்றொரு இந்திய உணவகத்தில் உணவருந்திவிட்டு அடுத்தாக பிற்பகல் 3.00 மணிக்கு பெக்காங் கோயில் (Bakong Temple) சென்றோம். முதலாம் இந்திர வர்மன் கி.பி.881 ஆண்டு இந்த மலைக் கோயிலை கட்டியுள்ளார் இந்த மலைக் கோயில் ஐந்து மாடி பிரமிடு போல் மேரு மலையை ஒத்ததாக கட்டப்பட்டுள்ளது. படிகட்டுகள் உயரமாக உள்ளன, ஒவ்வொரு நிலையிலும் நான்கு பக்கங்களிலும் படிகட்டுகள் ஏறுவதற்கு உள்ளன அதன் மூலையில் யானை சிற்பங்களும் கடைசி ஐந்தாவது நிலையில் உயர்ந்த கோபுரமும், அதன் கருவறையில் பிற்காலத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலையும் உள்ளது. இந்த கோயிலின் தரைப் பகுதியில் நான்கு பக்கங்களிலும் இரண்டு சிதைந்த நிலையில் செங்கல் கட்டுமான கோயில் கோபுரங்கள் உள்ளன.
நாளின் இறுதியாக பிரியா கோ (Preah Ko) கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலை புனித நந்தியின் கோயில் என அழைக்கப்படுகிறது. மூன்று நந்தி சிலைகள் கோயிலில் நிறுவப்பட்டுள்ளதால் சிவனுக்கு அர்பணித்து கட்டபட்டதாக சொல்லப்பட்டது. இப்பகுதியை அரஅராலாயா என அக்காலதில் அழைக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நான்காம் நாள் : 23-10-2023
காலை உணவு விடுதியில் முடித்துவிட்டு பயணத்தின் மிக முக்கிய கோயிலான ஆங்கோர்வாட் கோயிலுக்கு காலை 9.15 மணிக்கு சென்றோம். அங்கோர் என்பது நகரத்தையும் வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமர் மொழிச் சொல்லாகும். அங்கோர் கம்போடியாவில் உள்ள இந்துக் கோயிலாக இருந்து பின்னர் பௌத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது சுமார் 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய கெமர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூரியவர்மனால் (கி.பி.1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. ஆங்கோர் வாட் கோயிலை சுற்றி பெரிய அகழியும் உள்ளது. இந்த அகழியின் நீரின் மேல் உள்ள பழைய இணைப்பு பாதையில் மராமத்து பணிகள் நடைபெறுவதால், தற்காலிக ஞெகிழிப் பாலம் அமைத்துள்ளனர். மைய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றன. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. கோயிலுக்குள் செல்ல ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. அவை அரசர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் இறுதி இரண்டு வாயில்கள் பொது மக்கள் செல்வதற்கு என அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள முக்கிய நுழைவாயின் உள்ளே விஷ்ணு சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் நகரத்தின் தரை உயரத்திலிருந்து சிறிது உயர்த்தப்பட்ட மூன்று தளங்களின் மீது அமைந்துள்ளது. அங்கோர்வாட்டின் ஒட்டு மொத்த கோபுர அமைப்பும் தாமரைமொட்டின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நான்கு அடுக்கு கொண்ட திருசுற்றுகள் உள்ளன. திருசுற்றுகளின் வெளிப்புற சுவர்களில் அப்சரா சிற்பங்கள் அழகுற காணமுடிகிறது. கிட்டதட்ட 1000 அப்சரா சிலைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிப்புற சுற்றுசுவருடன், அடுத்து உள்ள மூன்று திருச்சுற்றுகளும் நான்கு பக்கங்களிலும் நீண்ட மூடிய தள அமைப்பில் உள்ளன. குறிப்பாக மூன்றாவது வெளி திருசுற்றில் நான்கு திசை திருசுற்றுகளிலும் 500 மீட்டர் , 8 அடி உயரத்தில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிறது. மிக நீண்ட சிற்ப அமைப்பில் மேற்கு திருச்சுற்றில் மகாபாரதத்தின் குருசேத்திரப் போர் காட்சிகளும், அடுத்து வட மேற்கு மூலையிலிருந்து இராமயணக் காட்சிகளும், தெற்கு பக்க நீண்ட சுவர் புடைப்பு சிற்ப தொகுதியில் இரண்டாம் சூரியவர்மனும், சூரியவர்மனின் படை ஊர்வலமும், கிழக்குப் பகுதியின் சிற்ப தொகுதியில் சொர்க்கம், நரகம் பற்றிய சித்தரிப்பும், எமனின் தீர்ப்பில் எவ்வாறு பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது போன்ற பல காட்சி அமைப்பு புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டள்ளன. இந்த நீண்ட சிற்பத் தொகுதியை பார்ப்பதற்கு வியப்பாகவே உள்ளது. இதை உலகின் நீளமான கற்சிற்ப கதைகள் என சொல்லப்படுகிறது.
இந்த திருச்சுற்றுகளுக்கு பிறகு கோயிலின் நடுப்பகுதி மேரு மலை வடிவ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ளது போல் நான்கு பக்க மூலைகளில் கோபுரங்களும், நடுவில் உயரமான தாமரை மொட்டு போன்ற கோபுரமும் உள்ளது. இந்த உயரமான நடுப்பகுதி மேல் தள அமைப்பிற்கு ஏற 700 பாகை கொண்ட உயரமான சிறய அகலம் கொண்ட படிகட்டுகள் ஒவ்வொரு திசை பக்கங்கத்திலு, மூன்று வழி படிகட்டுகளாக மொத்தம் 12 படிகட்டு வழிகள் உள்ளன. இதில் கிழக்கு திசையில் மட்டும் ஒரு பக்கம் மரத்தால் ஏறி இறங்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் தளத்தின் நான்கு பக்கங்களிலும் அப்சரா சிலைகள் உள்ளன. மேல் உச்சியின் கருவறையில் புத்தர் சிலைகள் நான்கு பக்கங்களிலும் உள்ளன. கீழே இரண்டாம் தள நிலையில் உள்ள சில கோபுரங்களில் மறு சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
அனைத்தையும் சுற்றுலா வழிகாட்டி மிக் ரத்னம் விரிவாக எடுத்துரைத்தார்.
பார்த்து முடித்து பிற்பகல் வணக்கம் உணவகத்தில் உணவருந்திவிட்டு 3.00 மணிக்கு டா பிரோம் (Ta prohm) என்ற கோயிலுக்கு சென்றோம். காட்டின் உள்ளே செல்வது போல் செடி கொடி மிக உயரமான மரங்களுடன் அடர்ந்து காணப்படும் உள்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்ததால் இந்திய அரசின் மைய தொல்லியல் துறையும், கம்போடிய தொல்லியல் துறையும் சேர்ந்து சில பகுதிகளை புனரமைத்துள்ளனர். இந்த கோயிலும் சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சிதலமைடந்து கற்குவியாலாக உள்ளன. கோயிலின் சுவர் கூரை மற்றும் பல இடங்களில் பெரிய பெரிய ஆலமரம், ஒதிய மரங்கள் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. அனைவரும் மரங்களின் மிகத் தடினமான வேர்களுக்கு இடையில் சென்று படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நாளின் இறுதியாக பேயான் கோயில் (Bayon temple) சென்றோம். பேயோன் என்பது கம்போடியாவில் உள்ள பௌத்த மதத்துடன் தொடர்புடைய முழுமையான அலங்கரிக்கப்பட்ட கெமர் கோவிலாகும். 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னர் ஏழாம் ஜெயவர்மன் அரசின் கோயிலாகக் கட்டப்பட்டது. பேயோனின் மிகவும் தனித்துவமான அம்சம், புத்தரின் அமைதியான மற்றும் சிரிக்கும் கல்முகங்கள், ஒவ்வொரு கோபுரத்திலும் நான்கு பக்கங்களிலும் முகங்களை காணலாம். பேயோன் கோயிலின் கோபுரங்களில் 216 பிரம்மாண்டமான முகங்கள் உள்ளன. முகங்களின் ஒற்றுமை ஏழாம் ஜெயவர்மனின் முகச் சாயிலில் உள்ளன. இம்முகங்கள் அவலோகிதேஸ்வரா அல்லது லோகேஸ்வரா என்று அழைக்கப்படுகிறது இது புத்திரின் போதிசத்துவருக்கு இரக்க குணம் சார்ந்த சாயலை கொண்டுள்ளது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பேயோன் வளாகம் மூன்று நிலைகளில் கட்டப்பட்டுள்ளது, நான்கு பக்க முகங்களும் ஓரே பாணியை கொண்டுள்ளது. அவை மலை போன்ற அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வளாகத்தின் மையத்தில் மூன்று நிலைகளில் உயரமான நாற்சதுர மேடை உள்ளது, இது முக்கியமாக கோயில் கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது, வெளிப்புறச் சுவரில் புடைப்பு சிற்பக் காட்சியகம் உள்ளது. அவை அங்கோரியன் கெமரின் அன்றாட வாழ்க்கையின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் காட்சிகளை சித்தரிக்கும் அடிப்படை சிற்பங்களின் வரிசையாக உள்ளது. மிகவும் விரிவாகவும், தகவல் தருவதாகவும் இருந்தாலும், அடிப்படை சிற்பங்களில் எந்த விதமான கல்வெட்டு உரையுடனும் இல்லை, அதனால்தான் எந்த வரலாற்று நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன, வெவ்வேறு சிற்பங்கள் எவ்வாறு தொடர்புடையவை என்பதில் தெளிவாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
பேயான் கோயிலை பார்த்து முடித்து தங்கும் விடுதி வந்து சேர்ந்தோம். பிற்பகலில் கம்போடியாவின் புகழ்மிக்க அப்சரா நடனம் பார்க்க வேண்டும் என சிலர் விரும்பினர், அதற்கேற்ப அந்நடனம் நடக்கும் விடுதி அரங்கத்திற்கு ஏற்கனவே 12 டாலர் கட்டணமாக செலுத்தியவர்கள் இரவு 7.00 மணிக்கு கிளம்பி சென்று பார்த்துவிட்டு நேராக 8.45 மணியளவில் சம்சாரா உணவு கூடத்திற்கு வந்தனர். இரவு சம்சாராவில் உணவருந்திவிட்டு தங்கும் விடுதிக்கு சென்று தூங்கி ஒய்வெடுத்தோம்.
எப்போதும் போல் காலை 7.30 மணிக்கு ஆங்கோர் அரசாட்சி தங்கும் விடுதியில் உணவருந்திவிட்டு 9.30 மணிக்கு கிளம்பி குலன் மலைக்கு (Kulen mountain) இரண்டு சிறிய பேருந்துகளில் சென்றோம். இந்த மலையின் உச்சியில் புத்தர் கோயில் உள்ளது. சிறய மலை என்றாலும், ஏற்கனவே இதற்கு முன் மழை பெய்திருந்ததால் மலைச்சாலை சேறும் சகதியுமாக இருந்தது. வழியில் அங்காங்கே செவ்வாழை தாரை தாரையாக தொங்கவிட்டு விற்கின்றனர். நண்பகல் 11.30 மணிக்கு அந்த மலையில் ஒடும் ஆற்றின் தரைப்பகுதியில் 1000 லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதை பார்த்தோம். ஆற்றின் ஒரு இடத்தில் படுத்த கோலத்தில் விஷ்ணு சிலை செதுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்துவிட்டு அந்த ஆற்றின் கரையோரம் சிறிது தூரம் நடந்த சென்று நீர் சுனையிலிருந்து ஊற்றெடுத்து வரும் காட்சியை பார்த்தோம். மிகத் தெளிவாக நீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அருகில் தற்காலிக ஒரு குடில் அமைப்பில் புத்தர் சிலையை வழிபட வைத்துள்ளனர்.
பின்னர் குலன் மலையின் உயரத்தில் அமைந்துள்ள புத்தர் கோயிலுக்குச் சென்றோம், கோயிலுக்குச் செல்ல படிகட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஏற முடியாதவர்கள் ஏற்றி சென்று விட 2 டாலர் கட்டணத்தில் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. மலை ஏறும் வழியில் சிங்கம், கருடன், மற்றும் மான் சிலைகள் உள்ளன. மலையின் உச்சிப் பாறையின் மீது படுத்த நிலையில் புத்தரின் பெரிய சிலை வடிவமைக்கபட்டுள்ளது. மாடிப்படி ஏறி சென்று பார்த்து வரலாம். பாறையின் கீழேயும் புத்தர் சிலைகள் உள்ளன. வழிபாடு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சிலைகளுக்கு எதிரே சிவன், விஷ்ணு, விநாயகர் ஆகிய சிலைகளும் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
மலையில் புத்தர் கோயிலை பார்த்தபின் இறங்கி பிற்பகல் 2.00 மணியளவில் நேற்றே திட்டமிட்டபடி கம்போடிய உணவு அருந்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தவர்களுக்காக ஒரு கம்போடிய உணவகத்திற்கு சென்று சூப், நூடுல்ஸ் சாப்பிட்டோம். கம்போடிய உணவில் அசைவம் இருக்கும் என்பதால் அதை விரும்பாதவர்களுக்கு ஏற்கனவே வணக்கம் உணவகத்திலிருந்து சாம்பார், தயிர் மற்றும் சைவ உணவு எடுத்து வரப்பட்டு அதை சாப்பிட்டார்கள். உணவு முடித்து வெளியே வந்ததும் நல்ல மழை பொழிந்து கொண்டு இருந்தது.
இதற்கடுத்து நாளின் இறுதி கோயிலாக பாந்தியாய் சிரே (Banteay Srei) சென்றோம். இக்கோயில் பத்தாம் நூற்றாடில் கட்டப்பட்ட
சிவலாயம் ஆகும். இதை கம்போடிய மன்னர்களால் கட்டப்படாத மாபெரும்
ஆலயமாகும், இதற்கு முன் ஈசுவரபுரம் என்றும் திரிபுவன மகேசுவரம்
என்றும் அழைக்கப்பட்டதாக தெரிகிறது. சிதிலமடைந்திருந்தாலும் மறு
சீரமைப்பு செய்யப்பட்டு அழகுடன் கூடிய பல நுண்ணிய சிற்பங்கள் உறுதியான செந்நிற கற்களால்
அழகுற செதுக்கப்பட்டுள்ளன. முக்கோண முகப்பு முகடு வடிவிலும் சிற்பங்கள்
காணப்படுகிறது. காலன்,
துவாரபாலகர்கள், அப்சரா, தேவ கன்னிகள், ராமயண வாலி சுக்ரீவன் சண்டை காட்சிகள்,
இந்திரன், குபேரன், வருணன்
போன்ற பல கடவுளர் சிற்பங்கள் உள்ளன. இவை மரத்தால் செதுக்கபட்ட
சிலைகள் போல் நுண்ணிய அளவில் காட்சியளிக்கின்றன.
இதற்கடுத்து மாலை 6.00 மணியளவில் சீம் ரீப்பில் உள்ள ஆற்றின் இருபக்கங்களிலும் உள்ள பழைய, புதிய கடைத் தெருவிற்கு சென்றோம். அங்கு உள்ள கடைகளில் துணி மணிகள், ஆடைகள், அலங்கார பொருட்கள், கம்போடிய ஆங்கோர்வாட் சிற்பங்கள், என பல கடைகளில் பொருட்களை வாங்கி இரவு 8.00 மணிக்கு சம்சார உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு விடுதி வந்து சேர்ந்தோம். நாளை இறுதி நாளானதால் ஊருக்கு திரும்பி செல்ல வேண்டிய ஏற்பாடுகளை தங்கும் விடுதியில் செய்து விட்டு உறங்கினோம்.
ஆறாம் நாள் : 25-10-2023
காலை 7.30 மணிக்கு ஆங்கோர் அரசாட்சி விடுதியில் உணவு அருந்தி விட்டு கடைசி நாள் என்பதால் அனைவரும் தங்களின் பெட்டி, பைகளுடன் விடுதியின் முகப்பு கூடத்தில் வைத்துவிட்டு வாசல் படியில் ஒரு குழு புகைப்படும் எடுத்துக் கொண்டனர். விடுதியில் உள்ளவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பேருந்தில் ஏறி டோன்லெ சாப் (Tonle Sap) என்ற கம்போடியாவின் பெரிய ஏரியில் மிதக்கும் கிராமத்தை காண சென்றோம். சுற்றுலா பயணிகளுக்காக அந்த ஏரியில் படகுகளில் வாழும் படகு வீடுகள், உணவகம், கடை, தபால் நிலையம் போன்றவற்றை படகுகளில் ஒரு மணி நேரம் சுற்றி காட்டுகிறார்கள். அதை பார்த்துவிட்டு இறுதியாக வணக்கம் உணவகத்தில் அனைவரும் தேநீர் அருந்திவிட்டு சீம் ரீப் வானூர்தி நிலையம் நண்பகல் 12.15 மணிக்கு வந்து சேர்ந்தோம். வானூர்தி நிலையத்தின் உள்ளே சென்று எடுத்துச் செல்லும் பையை எடை போட்டு Air Asia வழங்கிய வானூர்தி அனுமதி சீட்டைப்(boarding pass) பெற்றுக் கொண்டு உடல் மற்றும் எடுத்து செல்லும் பயணப் பெட்டிகள், மற்றும் பைகளை முழு பரிசோதனை செய்யும் இடத்திற்கு சென்றோம். இப்பரிசோதனை முடிந்த பின் இறுதியாக குடியேற்றப் பரிசோதனை (Immigration check) செய்து கடவு சீட்டில் (Passport) முத்திரை பதித்தனர். புதிய வானூர்தி நிலையம் என்பதாலும் அதிக வானூர்திகள் வந்து செல்வதில்லை என்பதாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. நிலையத்தின் நடுவே மிகப்பெரும் நான்கு பக்க செயவர்மனின் தங்கமூலாம் பூசப்பட்ட முக சிலை வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஏற்கனவே பிற்பகல் உணவு வழங்கப்பட்டிருந்ததால் அதை சாப்பிட்டுவிட்டு பிற்பகல் 2.50க்கு சீம் ரீப்பிலிருந்து பேங்காக் (Don Mueang International Airport) வானூர்தி நிலையத்திற்கு 4.00 மணிக்கு வந்தோம். ஐந்து மணி நேர காத்திருப்புக்குப் பின் இரவு 9.10 க்கு மற்றொரு வானூர்தியில் ஏறி 12.00 மணிக்கு சென்னை வந்து இறங்கினோம். மிகவும் மகிழ்ச்சிகரமான நீங்கா நினைவுகளுடன் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வீடு திரும்பினோம்.