திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம்.
தொல் ஓவியங்கள் மரபு நடை- 3 நாள்- 25-11-2018
கடந்த 25-11-2018 அன்று தொல் ஓவியங்கள் என்ற தலைப்பின் கீழ், செத்தவரை, உடையார் நத்தம் மற்றும் பனமலை ஆகிய ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
செத்தவரை
முதலில் செத்தவரை என்ற கிராமத்தின் மலையில் அமைந்துள்ள தொல் மாந்தர்கள் வாழ்ந்த வழித்தடம் அமைந்துள்ள ஓவியங்களை பார்க்கச் சென்றோம். காலை உணவு அருந்திய பின் சென்னை ஓவியக் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு சந்துரு என்ற சந்திரசேகர் அவர்கள் அடிப்படையாக ஓவியத்தையும், தொல் ஓவியங்கள் குறித்தும் வரைந்து காட்டி விளக்கினார். அவர் கூறியதாவது. இந்த பாறை ஓவியங்களை வரைந்தவர்களின் எண்ண ஒட்டம் என்னவாக இருக்கும், என்ன பார்த்தார்கள், என்ன வரைந்திருக்கிறார்கள், என்பதை யோசிக்க வேண்டும், உடற்கூறியியல் (Anatomy) விரிவான விளக்கச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. ஆலம்பாடியில் மாட்டின் உணவுப்பாதை குடலை வளைத்து வரைந்திருக்கிறார்கள். மாட்டின் உணவுப்பாதை நீளமானது அங்கு ஒரு செயல்பாடு நடைபெறுகிறது என்பதை உணர்த்த இப்படி வரைந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாறை ஒவியங்களை வரைந்தவர் ஒரு மொழி வைத்து வரைந்திருக்கிறார். ஆனால் நமக்குதான் அது தெரியாது. பாறை ஓவியங்கள் பார்க்கும் போது ஏதோ கோடுகள் படங்களை வரைந்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம், வரைந்தவர் என்ன பார்த்திருப்பார், என்ன வரைந்திருப்பார், இதை எதற்கு பொருத்தியிருப்பார் என்பதை யோசிக்க வேண்டும், செத்தவரை பாறை ஓவியத்தில் மீனுக்குக்கூட குடல் வரைந்திருப்பார்கள் புறத்தோற்றத்தில் உள்ள புள்ளிகளும் வரைந்திருப்பார்கள்.
ஒரு கருவி (Tool) அதன் செயல் முறையை மாற்றும், செயல் முறையில் அந்த
கருவியின் நோக்கம் பயன் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு வேலை நடக்கும்
போது அதற்கு தகுந்தவாறு அதன் கருவியையும் செயல் முறையும் மாற்றிக் கொண்டே
இருக்கிறோம். தேவைக்காக பொருளையும் செயலையும் மாற்றிக்கொண்டே
போகிறோம். அதே போல் பொருளுக்கான தேவை மாறுகிறது.
கண்ணால் பார்க்கும் பொருள் போல் வரையும் போது அதைப்போன்று செய்யும்
போது மாறி விடுகிறது. பார்க்கிற பொருள் எந்த ஊடகத்தில்
மாற்றம் செய்கிறமோ அதற்கு தகுந்தவாறு வடிவம் மாறிக்கொண்டே வரும்,. நமக்கு தேவைக்கான பொருளாகவும் மாற்றுவோம். செத்தவரை
மலையில் பாறை ஓவியம் இருக்கும் பாறையில் ஏறும்போது வரைய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு பொருளை வரையும் போது எங்கு எப்படி வரையப்போகிறோம் என்பது
தீர்மானிப்படுகிறது, வெறும் மாடோ, மானோ
மட்டுமே அதன் கருப்பொருள் அல்ல.
பின்னர் அனைவரும் மலையில் ஏறிச் சென்றோம். சற்று கடினமான மலையேற்றமே.
பின் செத்தவரை ஊரிலிருந்து கிளம்பி சங்கராபுரம் அருகே உள்ள கீழ்வாலை தொல் மாந்தர் ஓவியம் உள்ள பாறை பகுதிக்கு பார்வையிட சென்றோம். பிற்பகல் நேரமாகிவிட்டதால் உணவு அருந்தி விட்டு ஓவியம் இருந்த ஒரு பாறையின் அருகே திரு பாலமுருகன் அவர்கள் இந்த இடம் பாறை உடைப்பு பகுதிகளாக மாறி தொல் ஓவியம் அழியும் நிலையில் இருந்தது, பல எதிர்ப்புகளுக்கு பின்னர் இதை தற்போது பாதுகாத்து வைத்துள்ளனர். ஓவியங்களில் பல சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் விட்டன என கூறினார். இதன்பின் சற்று தொலைவில் உள்ள மற்றொரு பாறை ஓவியம் உள்ள இடத்திற்கு கரடுமுரடான பாதையின் வழியாக பாறைகளுக்கு இடையே நடந்து சென்று அங்குள்ள பாறை ஓவியங்களை பார்வையிட்டோம். பாறை இடுக்கில் சரிவாக படுத்துக்கொண்டு அந்த ஓவியங்களை வரைந்துள்ளனர். அங்கு பல வடிவங்களிலும் சில கோடுகள் போட்ட மனித உருவங்களும் இருந்தன இவற்றை அனைவரும் பார்வையிட்ட பின் அருகே உள்ள பாறையின் மீது அமர்ந்து ஓவியர் திரு சந்துரு அவர்கள் பாறை ஓவியத்தின சில அடிப்படை செய்திகளை விளக்கினார்.
ஒவியர் சந்துரு அவர்கள் நீங்கள் என்னென்ன உருவங்கள் ஓவியங்களை பார்த்தீர்கள் என வினவினார். சிலர் சூரியன் போன்ற படம், படகு, சிலர் கைகோர்த்து நிற்பது, உடுக்கை என கூறினர். அதற்கு அவர் ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபாடு உண்டு பழங்கால மனிதர்களின் தலையில், கழுத்தில் உடலில் அணிகலன்கள், சில அலங்கார பொருட்கள் அணிந்திருப்பர், உடலில் உடையில்லாமல் கூட இருந்தாலும் இந்த அணிகலன்கள் ஓவியங்களில் இருக்கும் இதற்கு காரணம் ஆதிமனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் விலங்குகளை பிடிக்கும் போது அல்லது எப்போதும் விலங்குகள் கழுத்து பகுதி குரல்வலையை கவ்வி பிடிக்கும், ஆகையால் அப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு அணிகலன்களை அணிந்தனர் என்றார். ஓவியத்தின் அடிப்படையே மேடு பள்ளம், ஒளி, இருள் என்பதை காட்டும். ஓவியத்தின் மூன்று அடிப்படைகள் உருவம், வடிவம், அருவம். முகம் என்பது ஒரு வடிவம், அருவம் உணர்வை வெளிப்படுத்துவது. பசி என்பது ஒரு form of abstract அதாவது புலனாகாத ஒரு வடிவத்தை தெரிவிப்பது. எப்போதும் வரையும் போதும் பார்க்கும் போது நமக்கு நேராக, பக்கத்தில், பின்னால் என வரையறை செய்து கொள்வோம் ஆக வரைபவர் தான் நடுப்புள்ளி.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படை உருவம் என்பது வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவற்றால் ஆனது என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். அனைத்து படங்களையும் வட்டத்தில் அடக்கி விடலாம். கால் பதிவு, தப்பளம் என்ற கைப்பதிவு அடிப்படை ஓவியம். சேற்றிலோ, வண்ணத்திலோ, ரத்தம் தோய்ந்த கையை பாறையில் அப்பி வைத்துள்ளவை ஆரம்பகால ஒவியங்கள். கையின் புற வளயங்களை வரைந்தது பெரிய கண்டுபிடிப்பாகும்.
பனை மரத்தில் இருக்கும் பண்ணாடை இயற்கை உருவாக்கிய தூரிகை அதன் கற்றையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து விட்டு வரைய ஆரம்பித்தது அதன் வளர்ச்சி. ஒசைக்கு கோடுகள், வடிவம் உருமாறி வந்து எழுத்தாக மாறியது. எழுத்தின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தின் காரணமாக மாறிக்கொண்டே இருக்கும். சிந்துவெளியின் எழுத்து வடிவம் போல் இங்கு கீழ்வாலையின் இருக்கிறது. ஓவியத்தில் காணும் குறியீடுகள் இதுதான் என நிர்ணயிக்க அதன் ஆதார சான்றுகளை வைத்து பார்க்க வேண்டும் எனவும் ஒரு ஆய்வாளன் தன் முடிவின் மீது தெளிவாக நிலையாக இருக்க வேண்டும் எனவும் திரு சந்துரு கூறி முடித்தார்.
பனைமலை
கீழ்வாலை ஓவியங்களை பார்த்து முடித்தப்பின்னர் மாலை 4.00 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் உடையார்நத்தம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும் செல்வது சிரமம் என்று அதை தவிர்த்துவிட்டு பனைமலை தாளகிரிசுவர் மலைக்கோவிலை பார்க்க சென்றோம்.
கோயிலை சுற்றிப் பார்த்து விட்டு கோயிலின் வெளி மண்டபத்தில் ஓவியர் திரு ராமச்சந்திரன் இதன் வரலாறும் ஓவியத்தின் விளக்கம், தத்துவ பரிமாணங்களை விரிவாக எடுத்து கூறினார்.
அதன் பதிவு
பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்மன் காலத்தில் (கி.பி.700-728) இந்த பனைமலை தாளகிரீசுவரர் கோயில் கட்டபட்டுள்ளது. இதே காலத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியவையும் கட்டபட்டுள்ளன. தெற்காசியவிற்கு கோயில் கட்டுமானத்திற்கு மிகவும் அடிப்படையானவை இந்த கோயில்கள். பல்லவர் காலத்தில் ஊர்கள் உருவாக்கும் போது நீர் நிலைகளையும் கோயில்களையும் கட்டுவது வழக்கம். பனைமலையில் உள்ள பெரிய ஏரி 1300 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. செஞ்சியிலிருந்து காஞ்சி செல்லும் ராஜபாட்டை வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த கோயில் கட்டுமானம் கற்களை ஒழுங்கில்லாமல் அரைகுறையாக கட்டப்பட்டு அதன் மீது சுண்ணம் பூசி ஒவியம் தீட்டப்பட்டுள்ளது. இங்குள்ள யாளி சிற்பம் தவிர மற்றவையெல்லாம் வண்ணங்களால் தீட்டப்பட்டவை. கருவறை லிங்கம் மிகவும் மெருகூட்டி நன்கு பளபளப்பாக்கபட்டுள்ளது இக்காலத்தில் இது போன்று செய்வது கடினம்.
கோயிலின் வாசலில் உயரமாக கட்டுவது கோபுரம், கருவறையின் மீது கட்டுவது விமானம். விண் மானம் என்பது வழக்குச் சொல், மானம் என்றால் அளவு. சிற்ப அளவுகோல்படி எல்லாம் அளவாக ஒவ்வொரு திசையிலும் செய்யபட்டுள்ளது. கோயிலின் சிறப்பு அமைப்பு இங்குள்ள கௌரி தாண்டவம் என்ற சந்தியா நடனமாகும், இந்த நடன ஒவியம் ராஜசிம்மன் காலத்தில் கட்டிய அனைத்து சிவலாயங்களிலும் இருக்கும். இதில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் காட்டபட்டுள்ளன. அவை சிவன் முயலகனை வதம் செய்வது அடுத்து கார்கோடகனுக்கு அடைக்கலம் தந்தது. உமையம்மை இல்லாத நேரத்தில் இதைத் செய்ததால் கோபம் கொண்டாள் அதனால் மாலையில் இந்த நடனத்தை சிவன் நிகழ்த்தி காட்டினர். இதன் தத்துவம் யாதெனில் தவறு செய்தால் ஒடுக்குவதும், நல்லது செய்தால் ஆதரவும், பாதுகாப்பு அளிப்பதும் என உள் அர்த்தமாக விளக்கப்பட்டுள்ளது. சிவன் பாவ புண்ணியத்திற்கு பொறுப்பு ஏற்க மாட்டார். தீய வினைக்கு நீங்களே பொறுப்பு பரிகாரத்திற்கு இடம் இல்லை, இதுவே அடிப்படை தத்துவம்.
சிற்ப கலைஞர்கள் சிற்பம் என சொல்லக்கூடாது, முழுவடிவம் தான் சிற்பம், தத்துவத்திற்கான ஒரு நிலையே சிலை, சிற்பம் முழு காட்சி அல்ல, நடராஜர் சிலை மட்டுமே முழு காட்சி, வைணவத்தில் அனந்தசயனம் முழு காட்சி. இதை தவிர்த்து இந்திய தத்துவத்தில் சிற்பம் கிடையாது மீதியெல்லாம் படிமங்களே. சிவன் ஐந்தொழில்களை செய்பவர் காத்தல், அழித்தல், படைத்தல் இவை மூன்றும் லிங்கத்தின் வடிவம் மற்ற இரண்டு மறைத்தல், அருளல். இதில் நடராஜர் மட்டுமே ஐந்து மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவதால் அது சிற்பம். எந்த காலத்திலும் அனந்த சயனம் முழிப்பது இல்லை, முழித்தால் பிரலயம், இடது பக்கம் படுத்தால் செரித்துவிடும், வலது பக்கம் படுத்தால் பிரபஞ்சம் இயங்கி கொண்டே இருக்கும் இது தான் தாத்பரியம். தமிழ் வழக்கில் அவதாரங்களே கிடையாது, வேத மரபில் சொல்லப்படுகிறது. சிவாச்சாரியர், பட்டர் வேதாந்தி கிடையாது. வேதாந்திகள் ஈசுவர மரபை நாத்திகம் என்று சொல்கின்றனர். இந்தியா முழுவதும் எழுப்பப்பட்ட, செதுக்கப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் வேதத்திற்கு எதிரானது, இதை செய்த ஆட்கள் நாத்திகன் என சொல்லப்படுகிறவர்களால் செய்யப்பட்டது. வேத மரபில் ஒரு சிற்பத்தை செதுக்க முடியாது, வேத மரபில் படைப்பு என்பது கிடையாது. யக்ஞத்தில் யோகத்திற்கு இடம் கிடையாது. யோகத்தின் வடிவம் நடனம்.
இந்த பனைமலை கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது, இரண்டு அடுக்குகளால் சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. இந்த வண்ணம் தீட்டுவது என்பது 1000 ஆண்டு அனுபவத்தால் ஏற்பட்டவை. பனைமலை கோயில் ஓவியங்களும், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்களும் ஒரே மாதிரியானவை.
சங்க இலக்கியத்தில் அகத்திணையில் 7 உள்ளன, அவை ஐந்திணை (முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை), மீதி இரண்டு விலக்கபட்டவை அவை கைக்கிளை, பெருந்திணை. நாயன்மார்கள் கைக்கிளை வழிபாட்டு முறையை பின்பற்றினர். ராமலிங்க வள்ளலாரும் கைக்கிளையை பின்பற்றினார். கைக்கிளையிலிருந்து பெருந்திணை வருவது தான் நாயன்மார்களின் பக்தி வழிபாடும் இலக்கியமும். யோகத்தின் ஒவ்வொரு கூறும் இந்த வடிவங்கள். யோக சாரத்திலிருந்து 10 நிலையை அடைந்ததால் 10 தலை ராவணன் என சொல்லப்படுகிறது, உண்மையில் 10 தலை என்பது இது தான். . சூர சம்மாரத்தில் ஒவ்வொரு தலையும் வெட்டுவது அகந்தையை வெட்டுவது ஆகும். ஆன்ம வீணையைத்தான் ராவணன் மீட்டுகிறார். வீணை யார் வாசிக்கிறார்களோ அவருக்கு ஏற்றவாறு வீணை செய்வார்கள். மற்றவருக்கு வீணையை கொடுக்கக்கூடாது. தமிழகம் முழுவதும் அகச்சேர் வாழ்க்கைக்கான கட்டுமானங்களை கொண்டுள்ளது. அந்த காலத்து தமிழ் சமூகம் ராவணனை பெருமை பாராட்டவில்லை. அகந்தை என புறக்கணித்துவிட்டது. கட்டுமானத்தை மறுப்பது தமிழ் வழக்கு வெறுமனே கட்டுமானத்தை பார்த்து பிரமித்துவிட்டு பெருமைப்பட்டு விடாதீர்கள், அதன் உள் தாத்பரியத்தின் மீது எழுந்த அகந்தையை மறுப்பது ஆகும்.
பல்லவர்கள் கட்டிய எல்லாம் தத்துவாரத்த ரீதியாக கட்டியதுதான். ஆனால் ஏன் இன்று வீழ்ச்சி அடைந்தது என்றால் அதிகாரத்தின் மீது நிலை கொண்டதால் ஏற்பட்டது. இவையெல்லாம் புதியதாக உருவாக்கியவை. திருவண்ணாமலை, மதுரை ஆகியவை நிலைத்து நிற்க காரணம் ஏற்கனவே 3000, 4000 ஆண்டுளாக இருந்தவை, கட்டுமானங்காளால் அல்ல தத்துவத்தால். எல்லா இடத்திலும் பூர்வீக இடத்தில் கட்டுமானம் தேவைப்படுகிறது. புதிய ஊர்களை உருவாக்கி அங்கு தத்துவங்களை புகுத்தினர், அடுத்து அடுத்து வந்த மன்னர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. திருவண்ணாமலை, திருவரங்கம் அரசு தலைமையில்லாமல் நிலைத்து நிற்கிறது என்றால் அவை பூர்வாங்கமாகவே உள்ளவை. கட்டுமானத்தை நம்பி மக்கள் போகவில்லை, கட்டிடம் இல்லாவிட்டாலும் போவார்கள்.
பங்குனி உத்திரம் ராஜேந்திரன் உருவாக்கியது. அவருடைய கல்வெட்டு பனைமலையில் உள்ளது. அனைத்து விதமான சடங்குகள், மதிப்பீடுகள், தாத்பரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பங்குனி உத்திரம் உருவாக்கப்பட்டது. அனைத்து பிரிவினரும் கிருஷ்ணர் வரை கொண்டாடுவர். மதுரை, திருவண்ணாமலை பெரிய மரபு, ஆனால் அரசர்கள் இதையெல்லாம் சேர்த்து புதிய மரபை கொண்டு வந்ததால் குழப்பம் ஏற்படுகிறது. அதை அரசு நிர்வாகம் ஒரே பண்பாடாக ஏற்றுக் கொள்கிறது. ராஜேந்திரன் காலத்திற்கு முன் எங்குமே பங்குனி உத்திரம் செய்யப்படவில்லை. காஞ்சி கைலாசநாதர் கோயில் கருவறையில் சந்தியா நடன ஓவியம் உள்ளது அதில் ஏகன், அநேகன் என்ற தத்துவம் சொல்லப்படுகிறது. ஒருவர் தன் தனித்தன்மை இழக்காமல் அதற்குள் செல்ல வேண்டும், முனீசுவரனை கும்பிடுகிறானகவே இரு, அதை அழித்துவிட்டு ஈசுவரனிடம் வந்துவிடு என்பது தான் முறை. கிருஸ்துவம், இசுலாமிற்கு மாறும் போது (மதம் மாறும் போது) வழக்கைவிட்டு (பழக்க வழக்கம், வழிபாடு, அனைத்தும்) செல்ல வேண்டும், ஆனால் செய்யவில்லை அதனால்தான் காலனி ஆட்சி காலத்தில் வலிமையாக இருந்தவரை அதன் கோட்பாட்டால் சைவ வைணவத்தை மறுத்தவர்கள் தமிழர்கள்.
அகம், பொருள் இவற்றில் பொருள் எதை சொல்கிறது என்றால் இறைவனை சொல்கிறது. தங்களுக்கு தேவையானதை எடுத்தக் கொண்டு பொருளில் சைவ வைணவத்தை வளர்த்துவிட்டார்கள். 12ஆம் நூற்றாண்டில் தான் இதை பதிப்பிகிறார்கள். நாயன்மார்கள், ஆழ்வார்கள் படைத்த களவியில் உரையைத்தான் பின்னால் எழுதும் போது இடைசெருகல் என நினைக்கிறார்கள்.
அடிப்படையில் தமிழ் மரபில் கைக்கிளை பெருந்திணைதான் சைவ, வைணவ மரபு இவை என்றும் வேதத்தை ஒப்பக்கொண்டதில்லை. வேத்திலிருந்து வரவில்லை, இதற்கு முன் யோகம் தான் இருந்தது.
இவ்வாறு ஓவியர் ராமச்சந்திரன் பேசியபின் மரபு நடை இனிதே முடிந்து வீடு திரும்பினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக